Tuesday, August 23, 2011

தாமரையில நூலெடுத்து

தாமரையில நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
வாழிலையில் மாவிளக்கு
வைத்தாரோ என்கண்ணே!

மாவிளக்குவைத்து அந்த
மகராசி கொப்பாத்தா
மலரடியக் கும்பிட்டால்
மகிமையெல்லாந் தந்திருவா!

தந்திருவா என்கண்ணே
தங்கமும் வயிரமுமாத்
தரித்தவளின் தாள்பணிஞ்சா
சிரிச்சமுகம் காட்டிருவா!
திருவெல்லாம் வந்துசேரும்!!

மாமன்வந்து பாத்திருவார்
மனம்நெறஞ்சு வாழ்த்திடுவார்!
மனம்போல என்கண்ணே
தனம்பெருக்கித் தந்திருவார்!

பாட்டிவந்து பாத்திருவா
என்கண்ணே உனக்குநகை
பூட்டியழகு பாத்திடுவா
புன்னகையில் மகிழ்ந்திடுவா!

தாத்தன்வந்தால் என்கண்ணே
தனிப்பெருமை சேர்ந்துவரும்!
பூத்தமலர் போலஉன்னைப்
பொத்தி வளத்திடுவார்

மாமிவந்து பாத்திருவா
என்கண்ணே உன்னை
மடியில்வைத்துக் கொஞ்சிடுவா!

வைகையில் பெருகிவந்த
வாழைத்தார் தன்னோடு
மதுரை மல்லிகையும்
மணக்கும் பலகாரம்
களனியில வெளஞ்சதெல்லாம்
கண்கொள்ளாச் சீர்வரிசை
களிப்போடு கொண்டுவந்து
கண்மணியே உன்னைக்
காணவந்து காத்திருக்கார்!

கண்ணேஎன் கண்மணியே
கண்ணுறங்கி முன்னெழுவாய்
பொன்னேஎன் பொன்மணியே
புதுயுகமே தாலேலோ!





















4 comments:

Chitra said...

அம்மா, இந்த பாடலை மிகவும் ரசித்தேன். ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது.

Thenammai Lakshmanan said...

மிக அருமை..:)

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

muthu said...

DEAR ATHAI,Let me introduce myself iam one of u'r brother's daughter.sorry i can't type in tamil.
Iam one of your kavithaikal's rasikai. NO WORD'S TO EXPLAIN U'R DEVOTIONAL KAVITHAIKAL.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...