Thursday, June 2, 2011

புரவியெடுப்பு . முதல்நாள்.

அற்புதமாய் எழுந்த
அழகுச் சிலைசெய்து

அச்சுப் பிசகாமல்
ஆர்வமுடன் வண்ணம் தீட்டிய

வேளார்க்கு மரியாதை
வளமாகச் செய்து

மக்களெல்லாம் வந்திருந்து
மகிழ்வோடு பார்த்திருக்க

வாட்டமாக மூங்கிலிலே
வைக்கோல் பிரிகட்டி

தோள்களிலே தூக்கிவைத்து
துவளாமல் தூக்கிவர


வாள்பிடித்துக் கருப்பசாமி
வழிகாட்டி அழைத்துவர

கொட்டும் அதிர்வேட்டும்
கொம்பூதிக் குடைபிடிக்க

மயிலாட்டம் பெண்இருவர்
ஒயிலாட்டம் ஆடிவர


சாமியாடி வாக்குச்சொல்ல
பூமியெல்லாம் மழைதூற

புரவிப் பொட்டலுக்குள்
பூப்போலக் கொண்டுவந்து


கூடிக் குலவையிட்டு
கொட்டகைக்குள் நிறுத்திவைத்தார்!

கோவிலிலே முன்பே
குட்டிவெட்டிப் பூசையிட்டதனை

அன்னம் பெருக்கி
அனைவருக்கும் உண்டியிட்டு

நாளை வருவதற்கு
நலமுடனே வீடுவந்தார்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...