Friday, November 26, 2010

முருகா என்றால் முத்தமிழாய்.....

வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்-ஆஹா
வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்

முருகா என்றால் முத்தமிழாய்-மால்
மருகா வருவாய் மயில்மேலே!
உருகா உள்ளமும் உருகாதோ-அன்பு
பெருகா தோஉன் பேர்சொன்னால்!--அஹா வேல்
பெருகும் அன்பில் பிணைந்தவனே-உயிர்க்
கருவாய் உயிரில் இணைந்தவனே!
நறுமணச் சந்தனப் பிரியனுனை-காண
மறுபடி மறுபடி வருகின்றோம்!--அஹா வேல்
சேவல் கொடியுடை செல்வமகன்-காணா
ஆவல் மிகவே ஆகுதையா!
பூவால் உன்னைப் பூசித்தோம்-தமிழ்
நாவால் பாட நலம்தருவாய்!--ஆஹா வேல்
பாலும் தேனும் அபிசேகம்--காண
பாலன் உனையே நாடிவந்தோம்!
வேலும் மயிலும் துணையென்றே-நடை
கோலும் இன்றிக் கூடிவந்தோம்!--ஆஹா வேல்
கையும் காலும் கடைசிவரை-பிறர்
கையை எதிர்பார்த் திருக்காமல்
செய்யும் செயலைச் சிறக்கவைப்பாய்-ஐயா
பெய்யும் மழையென அருள்புரிவாய்--ஆஹா வேல்
நெடித்த திருமால் மருமகனே-மனச்
செடிக்கு உரமாய் இருப்பவனே!
வெடித்த பஞ்சாய்ச் சிரிப்பவனே-பாப்
படித்த படியுனைச் சரணடைவோம்!--ஆஹா வேல்
எடுத்த காவடி எல்லார்க்கும்-மனம்
பிடித்த படியே வாழ்வுதந்தாய்!
தொடுத்த பூவால் மாலையிட்டோம்-இனி
அடுத்த பிறவியும் உன்னடிமை--ஆஹா வேல்
உன்னைத் தேடியே வருவோர்க்கு-அவர்
முன்னை வினைகளை முடித்துவைப்பாய்!
தன்னே ரில்லாத் தமிழ்மகனே-ஆஹா
என்னே உன்னருள் எழிலழகா!!--ஆஹா வேல்

1 comment:

Chitra said...

பக்தி மணம் கமழுது, அம்மா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...